�
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ.) வங்கியின் புதிய தலைவராக ராஜ்னிஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இவ்வங்கியின் தலைவராக உள்ள அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவிக்காலம் அக்டோபர் 7ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. எனவே இவ்வங்கியின் புதிய தலைவராக ராஷ்னிஷ் குமாரை ’அமைச்சரவை பணியமர்த்தும் கவுன்சில்’ தேர்வுசெய்துள்ளது. இவர் அக்டோபர் 7ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தனது பணியைத் தொடங்குவார் என்றும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்பதவி வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1980ஆம் ஆண்டில் இவ்வங்கியின் அதிகாரியாகத் தனது பணியைத் தொடங்கிய ராஜ்னிஷ் குமார் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். தனது கடின உழைப்பு காரணமாக 2015ஆம் ஆண்டில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் நிர்வாக இயக்குநராகப் பணியுயர்வு பெற்றார். தற்போது இவர் சில்லறை வர்த்தகப் பிரிவின் பொறுப்பாளராக உள்ளார். மறுபுறம் பணிநிறைவு பெறும் அருந்ததி பட்டாச்சார்யா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வரலாற்றில் முதல் பெண் தலைவராகப் பதவியேற்ற பெருமைக்குரியவராவார். அது மட்டுமல்லாமல் 60 வயதுக்குப் பிறகும் தலைவர் பதவி நீட்டிக்கப்பட்ட முதல் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றவர். கடந்த 2016ஆம் ஆண்டு மதிப்புமிக்க ஃபோர்ப்ஸ் பத்திரிகை இவரை உலகின் சக்தி வாய்ந்த 25 பெண்மணிகளுள் ஒருவராகத் தேர்ந்தெடுத்து கௌரவப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.�,