நடிகர் எஸ்.வி.சேகரைக் கைது செய்யும் நடவடிக்கைக்குத் தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
கடந்த 17ஆம் தேதியன்று பேராசிரியை நிர்மலா விவகாரம் குறித்து, செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித். அப்போது, அங்கிருந்த பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டினார். இந்த விவகாரம் சர்ச்சையை உண்டாக்கிய நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறான கருத்தொன்றைப் பகிர்ந்திருந்தார் நடிகர் எஸ்.வி.சேகர்.
பாஜகவைச் சேர்ந்த இவரது கருத்தை, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே கண்டித்தனர். இதனையடுத்து, தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்து அந்தப் பதிவை நீக்கினார் எஸ்.வி.சேகர். அதோடு, தனது செயலுக்காக இரண்டு முறை மன்னிப்பு கேட்டார். ஆனாலும், அவருக்கு எதிரான கண்டனங்கள் குறையவில்லை.
இந்த நிலையில், மத்தியக் குற்றப் பிரிவுக் காவல் துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வரும்வரை தன்னைக் கைது செய்யத் தடை விதிக்க வேண்டுமென எஸ்.வி.சேகர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நேற்று (ஏப்ரல் 28) விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, எஸ்.வி.சேகரைக் கைது செய்யத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார். “இந்த வழக்கில் கைது செய்ய காவல் துறைக்குத் தடை விதிக்க முடியாது. மனுதாரரின் முன்ஜாமீன் மனு கோடைக்கால நீதிமன்றத்தின் முதல் அமர்வில் விசாரிக்கப்படும்” என்று தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணை வரும் மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதற்குள் எந்த நேரமும் எஸ்.வி. சேகர் கைது செய்யப்படலாம், அரசு நினைத்தால்!�,