�இந்தியாவுக்கு மரவள்ளிக்கிழங்குகளை ஏற்றுமதி செய்ய தாய்லாந்து திட்டமிட்டுள்ளது.
மரவள்ளிக்கிழங்கு ஏற்றுமதியில் உலகின் மிகப்பெரிய நாடாக தாய்லாந்து விளங்குகிறது. மரவள்ளிக்கிழங்கு ஏற்றுமதிக்கான புதிய சந்தை வாய்ப்புகளைக் கண்டறிந்து ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற்சியிலும் தாய்லாந்து ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இப்போது இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் மரவள்ளிக்கிழங்கு ஏற்றுமதி செய்ய அந்நாடு திட்டமிட்டுள்ளது.
ஜூன் 28ஆம் தேதி தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இரண்டு நாட்கள் மரவள்ளிக்கிழங்கு மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட தாய்லாந்து வர்த்தகத் துறை அமைச்சர் சோன்திரட் சோந்திஜிராவோங் பிசினஸ் லைன் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், மரவள்ளிக்கிழங்குக்கு இந்திய அரசு விதித்துள்ள அதிகபட்ச வரி குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் நியூசிலாந்தில் எங்களுக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது” என்றார்.
உள்நாட்டு மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் மரவள்ளிக்கிழங்கு இறக்குமதிக்கு இந்தியா 68 விழுக்காடு வரி விதித்துள்ளது. அதிகபட்ச வரிவிதிப்பால்தான் தற்போது இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய இயலவில்லை என்று தாய்லாந்து மரவள்ளிக்கிழங்கு வர்த்தக அமைப்பின் தலைவர் பூஞ்சாய் ஸ்ரீசய்யோங்பனிச் கூறுகிறார். நைஜீரியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியாளராகத் தாய்லாந்து விளங்குகிறது.�,”