இந்தியாவில் சூரியன் உதிக்கும் நேரத்தைப் பொறுத்து இருவேறு நேரக் கணக்கை கடைப்பிடிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை 19ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய பிஜூ ஜனதா தள எம்.பி. மக்தாப், இந்தியாவில் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு இடையே நேர வித்தியாசம் என்பது 2 மணி நேரம் என்ற அளவில் உள்ளது . ஆனால் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தையே பயன்படுத்துகிறோம். எனவே இருவேறு நேரம் மண்டலங்கள் தேவை என்று தெரிவித்தார். இது தொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் அனந்த் குமார், முக்கிய பிரச்சனை குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்று தெரிவித்தார்.
தற்போது, இந்திய நேரக் கணக்கு என்பது லண்டனில் உள்ள க்ரீன்விச்சில் உள்ள நேரத்தைவிட ஐந்தரை மணிநேரம் பின் தங்கியது. இந்தியா முழுவதும் தற்போது ஒரே நேரக் கணக்கு தான் உள்ளது. ஆனால் சூரியன் உதிக்கும் நேரம் என்பது கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் இடையே வித்தியாசப்படுகிறது. குறிப்பாக, அருணாச்சலப் பிரதேசத்தில் தற்போது இருக்கும் இந்திய நேரத்தின் படி, சூரியன் 4 மணிக்கே உதித்துவிடுகிறது. ஆனால், அலுவலகம் 10 மணிக்குத் தான் தொடங்குகிறது. இந்த இந்திய நேரத்தை மாற்றி அமைப்பதன் மூலம் உற்பத்தி நேரம் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை சேமிக்க முடியும்.
இதன்படி, வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் தனியான நேரக்கணக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் பாஜக முதல்வர் பீம கண்டு இதுதொடர்பாக வலியுறுத்தியுள்ளார். இப்படி இந்திய நேரத்தை மாற்றியமைப்பதன் மூலம், 270 கோடி வாட் மின்சாரம் சேமிக்கப்படும் என்றும், இதன் மூலம் சுமார் 94 ஆயிரம் கோடி ரூபாய் செலவு மிச்சமாகும் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஊடகத்திடம் பேசிய மக்தாப், இந்தியாவில் இரண்டு நேர மண்டலங்களை உருவாக்க வேண்டும். இரண்டாவதாக உருவாக்கப்படும் மண்டலம் மேற்கு வங்கம் – அசாம் எல்லையை மையமாக வைத்து வரையறுக்கலாம் என்று தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நேரத்தில் 30 நிமிடங்கள் வித்தியாசம் உள்ளன. ஆனால் வங்கதேசத்தையும் தாண்டியுள்ள வடகிழக்கு இந்திய மாநிலங்களிலோ இந்தியாவின் பிறபகுதிகளில் பின்பற்றப்படும் நேர அளவே பின்பற்றப்படுகிறது என்பது நிச்சயம் மாற்றி அமைக்க வேண்டிய ஒன்றே என்பதே பலரின் கருத்து.�,