‘ஆளுநர்கள் என்பதே மத்திய அரசின் கங்காணிகள்தான்’ அதிமுகவின் தினகரன் அணியின் முன்னணி தலைவர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் நேற்று (செப்டம்பர் 20) செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத் கூறியதாவது, “ஆளுநர்கள் என்பதே மத்திய அரசின் கங்காணிகள்தான். மாநில மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் தான்தோன்றித்தனமாக நடவடிக்கைக்கு ஆளுநர் செவி சாய்த்திருப்பது கொடூரமானது.
ஆளுநராக இருந்த ரோசையா மாற்றத்துக்குப் பிறகு, நிரந்தர ஆளுநர் நியமிக்காதது ஏன்? திட்டமிட்டே மத்திய அரசு நிரந்தர ஆளுநரை நியமிக்காமல் காலம் தாழ்த்துவது ஏன்?
18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ததன் மூலம் சபாநாயகர் ஜனநாயகத்தைச் சிரச்சேதம் செய்வதற்குத் துணிந்திருக்கிறார். சபாநாயகர், முதல்வர், ஆளுநர் ஆகியோர் சேர்ந்து இந்த ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியிருக்கிறார்கள். இதன்மூலம் சபாநாயகர் தனபால் வரலாற்றுப் பழியைச் செய்திருக்கிறார். சபைக்கு வெளியே சட்டமன்ற உறுப்பினர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க அதிகாரம் கிடையாது. கட்சிக்குத் துரோகம் செய்தவர்களுக்கு வரவேற்பு தருகிறார்கள். சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தபோது அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள்மீது இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆட்சி நீடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.
முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் காவிரியில் நீராடியிருப்பதன் மூலம் காவிரி அழுக்காகி விட்டது. செய்யக்கூடாத பாவங்களைச் செய்துவிட்டு எந்தத் தீர்த்தத்தில் குளித்தாலும் இவர்களுக்குப் புண்ணியம் கிடைக்கப் போவதில்லை” என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.�,