ஆர்.கே.நகர் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க வழக்கு தொடரவுள்ளதாக அமமுக துணைப் பொதுச் செயலாளரும், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டிடிவி தினகரன், இன்று (செப்டம்பர் 18) தனது தொகுதிக்குட்பட்ட சேனியம்மன் கோயில் பகுதியிலுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பு மக்களுக்கு தள்ளுவண்டிகள், சலவைப் பெட்டிகள், தையல் எந்திரங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர சைக்கிள்கள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “ஆர்.கே. நகர் தொகுதியில் குடிதண்ணீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. நான் ஜீவரத்தினம் சாலையில் வந்து கொண்டிருக்கும் போது, அப்பகுதி மக்கள் என்னிடம் இந்த கழிவுநீர் கலந்த தண்ணீர் பாட்டிலைக் காண்பித்து, உங்களுக்கு ஓட்டுப்போட்டதால்தான் நாங்கள் பழிவாங்கப்படுகிறோம், ஆனால் நாங்கள் அதற்கு அடிபணிய மாட்டோம் என்று தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் இத்தொகுதியில் ஆட்டோ கேஸ் பிளாண்டை கொண்டுவர தமிழக அரசு துடிக்கிறது. இந்த பகுதியில் ஏற்கனவே இந்தியன் ஆயில் நிறுவனத்தினுடைய பழுதடைந்த லைன்களும், குழாய்களும் பராமரிப்பின்றி கிடக்கிறது. இந்த பகுதி மக்கள் பிரச்சனையை தீர்க்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்” என்றார்.
ஹெச்.ராஜா கைது செய்யப்படாதது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தவர், “பாசிச பாஜக ஆட்சி என்று கோஷம் போட்ட தூத்துக்குடி மாணவி ஷோபியாவை போலீசார் உடனே கைது செய்தனர். ஆனால் போலீசாரையும், நீதிமன்றத்தையும் அவதூறாகப் பேசிய ஹெச்.ராஜாவை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை. அவர் போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உள்ளார். அவர் சொன்னது போல போலீஸ் துறைக்கு கல்லீரல் கெட்டுப் போய் உள்ளது என்பதுபோல் இருக்கிறது. வடமாநிலத்தில் இருப்பது போலவே இங்குள்ள ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்” என்றவர் டெல்லியின் உத்தரவுப்படியே தமிழகத்தில் ஆட்சி நடைபெறுவதாகவும், மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து விஷமிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.
�,”