அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் இணைந்து உருவாக்கிய பேந்தம் ஃபில்ம்ஸ் எனும் படத் தயாரிப்பு நிறுவனம் இனிமேல் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரும் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தவருமானவர் அனுராக் காஷ்யப். படங்களை இயக்கி மட்டுமே வந்த அனுராக் 2011ஆம் ஆண்டு இயக்குநர் விக்ரமாதித்யா மோத்வான், தயாரிப்பாளர் மது மந்தேனா மற்றும் விகாஸ் பாஹ்ல் ஆகியோருடன் இணைந்து பேந்தம் ஃபில்ம்ஸ் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.
அந்தவகையில் இந்தக் கம்பெனியின் முதல் படமாக லூட்டெரா 2013ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. மோத்வான் இயக்கிய இதில் ரன்வீர் சிங், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதை பாலாஜி மோஷன் பிக்சர்ஸும் இணைந்து தயாரித்தது. அதன் பின்னர் ஹஸீ தோ பஸீ, குயின், அக்லி,என்.ஹெச்10, ஹண்டர், மசான், பாம்பே வெல்வட் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த அந்நிறுவனம்தான் தற்போது நடிகையாகவும் விராட் கோலியின் மனைவியுமாகவும் மாறியுள்ள அனுஷ்கா ஷர்மாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியது.
இப்படியாக பாலிவுட்டில் முக்கியக் கவனத்தை ஈர்த்த அந்நிறுவனம் இனிமேல் இயங்காது எனத் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள அனுராக், “இந்நிறுவனம் தொடங்குவது எங்களது ஒரு கனவு. இந்நிறுவனத்தின் எங்களது இந்தப் பயணமானது தற்போது முடிவை எட்டியுள்ளது. இந்நிறுவனம் வாயிலாக எங்களது சிறந்த படைப்புகளை இதுவரை கொடுத்திருக்கிறோம்.
வெற்றிகளையும் பெற்றுள்ளோம் அதுபோல தோல்விகளையும் பெற்றிருக்கிறோம். தற்போது பிரிந்தாலும்கூட அவரவர் தனித்தனி வழிகளில் சென்று சிறப்பாகச் செயல்படுவோம். எங்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமைய பரஸ்பரம் ஒருவருக்கொருவர் வாழ்த்தி கொள்கிறோம்” எனும் தொனியில் உணர்ச்சிகரமாகக் [கூறியுள்ளார்.](https://twitter.com/anuragkashyap72/status/1048301339971936256)
அனுராக்கின் இந்த அறிவிப்பு பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.�,