75 கோடி தடுப்பூசி: இந்தியாவைப் பாராட்டும் உலக சுகாதார அமைப்பு!

politics

இந்தியாவில் 75.10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றினால் உலக நாடுகள் அனைத்தும் பெரியளவிலான பாதிப்புகளைச் சந்தித்து வந்த நிலையில், தற்போது அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுபோன்று இந்தியாவிலும் கடந்த ஜனவரி மாதம் முதல் படிப்படியாக ஒவ்வொரு வயதினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில், “பிரதமர் மோடியின் ‘அனைவருடன் இணைந்து, அனைவரின் வளர்ச்சிக்காக’ என்ற கொள்கையின்படி, உலகிலேயே மிகப் பெரிய தடுப்பூசி செலுத்தும் பணியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம் . தடுப்பூசி திட்டத்தில் புதிய பரிணாமங்களைத் தொட்டு வருகிறோம். நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிலையில், 75 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குநர் மருத்துவர் பூனம் கூறுகையில், “தடுப்பூசி செலுத்தும் பணியில் இந்தியா வேகமாகச் செயல்படுகிறது. 85 நாட்களில் முதல் 10 கோடி தடுப்பூசிகளை இந்தியா செலுத்தியது. தற்போது 13 நாட்களில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கையை 65 கோடியிலிருந்து 75 கோடியாக உயர்த்தியுள்ளது. இந்தியாவுக்கு பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்குர், “இது ஒரு பெரிய சாதனை. இந்த வெற்றிக்கு காரணமாக சுகாதார ஊழியர்கள், மாநில அரசுகள் மற்றும் பிரதமருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தடுப்பூசி போடுவதில் இந்தியா பல நாடுகளை விஞ்சியுள்ளது” என்று பாராட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 12) மாபெரும் தடுப்பூசி முகாம் மூலம் ஒரே நாளில் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *