இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டுமென மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில்….
ஏப்ரல் முதல் வாரத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தவிர அனைத்து அமைச்சர்களும் அரசில் இருந்து விலகினார்கள். இந்த பின்னணியில் இன்று ஏப்ரல் 18ஆம் தேதி 17 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார் அதிபர் கோத்தபய ராஜபக்சே.
அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிராகரித்துள்ள கோத்தபய ராஜபக்சே… அதற்குப் பதிலாக தனது குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு அமைச்சர்களாக மீண்டும் வாய்ப்பு வழங்குவதை தவிர்த்துள்ளார்.
பசில் ராஜபக்சே, சமல் ராஜபக்ச, நமல் ராஜபக்சே ஆகிய தங்களது குடும்ப உறுப்பினர்கள் 3 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்காமல் மக்களின் கோபத்தை சற்று தணிக்க முயற்சி செய்துள்ளார்கள் கோத்தபய ராஜபக்சேவும் மஹிந்த ராஜபக்சேவும்.
ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் அலி சபரி நிதியமைச்சர் ஆகவே தொடர்கிறார். மக்கள் கோரிக்கைகளை ஏற்காமல் மீண்டும் ஒரு புதிய அமைச்சரவையை அதிபர் கோத்தபாய அமைந்திருப்பதால் போராட்டங்கள் தொடர்ந்து நீடிக்கவே வாய்ப்பு உள்ளன என்கின்றன இலங்கையில் இருந்து வரும் தகவல்கள்.
**வேந்தன்**