வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இதயத்தில் ஸ்டெண்ட் பொருத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம். அடிப்படையில் விவசாயியான இவர், நேரம் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் வயலுக்குச் செல்லக்கூடியவர்.
2021 சட்டமன்ற தேர்தலில் குறிஞ்சிபாடி தொகுதியிலிருந்து போட்டியிட்டார். பிரச்சாரம் சூடுபிடித்த சமயத்தில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் இருந்தபடியே, தொலைபேசி வாயிலாக பிரச்சாரம் செய்தார்.
பின்னர் தேர்தலில் வெற்றி பெற்ற இவர் திமுக அரசில் வேளாண் துறை அமைச்சராக உள்ளார்.
அமைச்சர் பதவி பொறுப்பு ஏற்றதிலிருந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தது முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கடந்த 11ஆம் தேதி இதயத்தில் ஸ்டெண்ட் பொறுத்தினர். ஸ்டெண்ட் பொறுத்திய இரு தினங்களிலேயே, அக்டோபர் 13ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஸ்டெண்ட் பொறுத்தி ஓய்வு எடுக்காமல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில், பொறுத்தப்பட்ட ஸ்டெண்ட் நகர்ந்திருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அக்டோபர் 14ஆம் தேதி ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
இதனிடையே, கடந்த அக்டோபர் 15ஆம் தேதி மருத்துவமனைக்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் அமைச்சரிடம் நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-வணங்காமுடி**
�,