உங்கள் மாவட்டத்தில் ஊரடங்கு தொடர்கிறதா? அமைச்சரவை முடிவு!

politics

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்க வரும் மே 2ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் மே 3ஆம் தேதியுடன் முடிகிறது. எனினும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் கடந்த 27ஆம் தேதி ஆலோசனை நடத்தினார். பெரும்பாலான மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்றே கோரிக்கை வைத்தனர்.

தமிழகத்தில் மற்ற பகுதிகளைவிட மாநகர் பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை, கோவை, மதுரை பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனாலும், கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த இரண்டு நாட்களாக ஊரடங்கின் நிலை தொடர்பாகக் கண்காணிப்புக் குழு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

ஆட்சியர் கூட்டத்தில் பேசிய முதல்வர், ‘உங்கள் மாவட்டங்களின் முழு கட்டுப்பாட்டையும் உங்களிடம்தான் கொடுத்துள்ளோம். தேவையான போது முழு ஊரடங்கையும் நீங்கள் மாவட்டங்களில் அறிவித்துள்ளீர்கள்’ என்று பாராட்டினார். நோய்த்தொற்று குறைந்திருக்கும் மாவட்டங்களின் கலெக்டர்கள் பலர், அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டும் பொதுப்போக்குவரத்து தவிர மற்ற போக்குவரத்தை இயக்கலாம். கடைகளை சமூக இடைவெளியைப் பின்பற்றும் கடுமையான நிபந்தனைகளோடு திறக்கலாம். கடைகள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்றால் யார், எவர் என்று பார்க்காமல் உடனே சீல் வைக்கலாம்.’ என்று யோசனை சொல்லியிருக்கிறார்கள்.

நேற்று கலெக்டர்களுடன் முதல்வர் தீவிரமாக ஆலோசித்த நிலையில், ஊரடங்கு முடிவதற்கு முந்தைய தினமான மே 2ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிக முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க மட்டுமே ஞாயிற்றுக்கிழமைகளில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும். இறுதியாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவே ஆலோசனை நடத்தப்பட்டது.

தற்போது நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கலாம். தமிழகத்தைவிடக் குறைந்த அளவிலான பாதிப்பைக் கொண்ட பஞ்சாப் மாநிலமே ஊரடங்கை மே 17ஆம் தேதி வரை நீட்டித்திருக்கும் நிலையில், அதுபோலவே தமிழகத்திலும் நீட்டிக்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நோய்த்தொற்று பரவாத மாவட்டங்களில் குறைந்தபட்ச தளர்வுகளைச் செய்வது குறித்தும் அமைச்சரவை முடிவெடுக்க இருக்கிறது.

**எழில்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *