முழு ஊரடங்கை நோக்கித் தமிழகம்: கோயில்கள் செல்ல தடை, மீண்டும் இ பாஸ்?

politics

ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா இரவு ஊரடங்குக் கட்டுப்பாடுகள் ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 30 வரை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால்…ஏப்ரல் 26 முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2015இன் கீழ் இந்த கட்டுப்பாட்டுகள் ஏப்ரல் 26 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் நடைமுறைக்கு வருகின்றன.

அவையாவன…

*அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை கூடங்கள் (கிளப்ஸ்), அனைத்து மது கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதியில்லை.

*பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மளிகை, காய்கறி கடைகள், இதர அனைத்துக் கடைகளும் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி வழக்கம்போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும் வணிக வளாகங்களில் இயங்கும் பல சரக்குக் கடைகள் மற்றும் காய்கறிக் கடைகளுக்கும் அனுமதி இல்லை. தனியாக செயல்படுகிற மளிகை உட்பட பல சரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள்,குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதிக்கபப்டுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

*சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.

*அனைத்து உணவகங்கள் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். உணவகங்கள், மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

*விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

*அனைத்து மின் வணிக சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளோடு இயங்கலாம்.

*அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை.எனினும் தினமும் நடைபெறும் பூஜைகள் பிரார்த்தனைகள், சடங்குகளை வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடை இல்லை.

*கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மதம் சார்ந்த திருவிழாக்கள், மற்றும் கூட்டங்களுக்கு ஏப்ரல் 10 முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், குடமுழுக்குத் திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ 50 நபர்கள் பங்கேற்போடு நடத்திட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்துகொண்டு உரிய நடைமுறைகளைப் பின்பற்றி குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. புதிதாக குடமுழுக்க நடத்த அனுமதி இல்லை.

*திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. இறுதி ஊர்வலங்கள் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

*தகவல் தொழில்நுட்பம், மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே கண்டிப்பாக பணிபுரிய வேண்டும்.

*கோல்ஃப் டென்னிஸ் கிளப் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சங்கம், குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை. எனினும் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.

*புதுச்சேரி தவிர்த்து ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் நபர்கள் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த விவரத்தை தமிழ்நாட்டுக்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.

வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு விமானம், கப்பல் மூலம் வரும் பயணிகள் அனைவரும் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த விவரத்தை தமிழ்நாட்டுக்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்”

என்று புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

பேருந்துகளில் இருக்கைகளில் மட்டும் பயணம், டாக்ஸிகளில் , ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை தொடர்கிறது. மேலும் இரவு நேர ஊரடங்கு,ஞாயிறு முழு ஊரடங்கு தொடர்கிறது.

மேற்கண்ட கட்டுப்பாடுகள் ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கினாலும் எப்போது வரை என்ற குறிப்பு அரசின் அறிவிப்பில் இல்லை. கடந்த மார்ச் 28 ஆம் தேதி தமிழகத்தில் 13 ஆயிரத்து 70 நபர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில்… ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழகத்தில் 95 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மூன்று வாரங்களில் ஏழு மடங்குக்கும் அதிகமாக கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

இந்த நிலை தொடரும் பட்சத்தில் அடுத்தடுத்து முழு ஊரடங்கும், மாவட்டங்களுக்கு இடையிலான இ பாஸ் நடைமுறையும் மீண்டும் அமல்படுத்தப்படலாம் என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *