நீர்நிலைகளில் கழிவுகளைக் கொட்டினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன்

Published On:

| By admin

தொழிற்சாலை கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வரும் கழிவுநீரினால் தென்பெண்ணை ஆறு மற்றும் கெலவரப்பள்ளி அணை பகுதி மாசடைந்து, அணையிலிருந்து வெளியேறும் நீரினால் ஏற்படும் பாதிப்புகளுக்குத் தீர்வு காண்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் மெய்யநாதன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மெய்யநாதன், “தென்பெண்ணை ஆற்றின் நீரை நன்னீராக்கவும், எதிர்காலத்தில் அணையைத் தூய்மையாக மாற்றவும், கர்நாடக மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை இனி சுத்திகரித்து அனுப்புவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தற்போது அணையில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அணையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் முழு பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் இன்னும் 15 நாட்களில் அதற்குரிய பணிகள் தொடங்கப்படும்.
இந்த மாவட்டத்தில் கிரானைட் தொழிற்சாலைகளை வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். அதைவிடுத்து கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டி மாசுபடுத்தும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.
மேலும் பேசிய அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவி ஏற்ற நாளில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறினார். பின்னர், அணைப் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை அமைச்சர் மெய்யநாதன் கேட்டறிந்தார்.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share