கொடநாடு கொலை வழக்கு விவகாரம் மீண்டும் பூதாகரமாகியுள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நாளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
திமுக ஆட்சி அமைத்து 100 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், தற்போது கொடநாடு கொலை வழக்கை தூசு தட்டி எடுத்திருக்கிறது. இந்நிலையில், ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி உட்பட ஐந்து பேர், கொடநாடு வழக்கை மறு விசாரணை செய்து வருவது குறித்தும், முக்கிய மூன்று நபர்களிடம் நேற்று மாலை வாக்குமூலங்கள் வாங்கியது குறித்தும் சட்ட வல்லுநர்களிடம் தீவிரமான ஆலோசனை செய்து வருவதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, கொடநாடு வழக்கை தற்போது கையிலெடுக்க என்ன அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
திமுக அரசை கண்டித்து இன்று சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது. கலைவாணர் அரங்குக்கு வெளியே அதிமுகவினர், ‘திமுக பொய் வழக்குப் போடுகிறது’ என கோஷம் எழுப்பி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
முதலில் ஓபிஎஸ் கீழே அமர்ந்தார், அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, வேலுமணி உட்பட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தரையில் அமர்ந்து திமுக ஆட்சிக்கு எதிராகக் கோஷமிட்டனர்.
இதையடுத்து, 10.45 மணிக்கு ஓபிஎஸ் அங்கிருந்து புறப்பட்டார். அடுத்ததாக ஈபிஎஸ் கிளம்பினார். அவரது கார் பின்னால் மற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்களும் கிளம்பினர். முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் செல்லூர் ராஜூ இருவரும் சோர்வுடன் நடந்தே எம்.எல்.ஏ விடுதிக்குள் சென்றனர். அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தபோதும் கூட்டணி கட்சிகளான பாமக மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்யவில்லை.
கொடநாடு வழக்கு தற்போது அதிமுக தலைமைக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ள, சூழலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் நாளை காலை 11 மணிக்கு ஆளுநரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, “இன்று காலை சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த போதே, ஆளுநரைச் சந்திக்கத் திட்டமிட்டனர். ஆனால் அதற்கான அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை. இதனால் நாளை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். நாளைய சந்திப்புக்கு ஆளுநர் அப்பாயிண்ட்மெண்ட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்” என்கின்றனர்.
**-பிரியா, வணங்காமுடி**
�,