{
கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை அளிக்க ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அதுபோலவே அயர்லாந்திலிருந்து வந்த 21 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பார்கள், மால்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை 31-ம் தேதி வரை திறக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொடர்பாக ரஜினிகாந்த் இன்று (மார்ச் 19) தனது ட்விட்டரில், “`தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. அரசோடு சேர்ந்த மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம்” என்று தெரிவித்தார்.
மேலும், “இந்த இக்கட்டான சூழ்நிலையில் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்” என்றும் கூறியுள்ளார்.
**எழில்**
�,