சுயமாக செயல்பட முடியவில்லை: முதல்வர் ரங்கசாமி குமுறல்!

politics

புதுச்சேரி மாநிலத்தில் பாஜக கூட்டணியில் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் ரங்கசாமி, அதிகாரிகளை மாற்றமுடியவில்லை, சுதந்திரமாகச் செயல்படமுடியவில்லை என தனது ஆதரவாளர்களிடம் புலம்பியுள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரேதசத்தில் 2016-2021ஆம் ஆண்டு காலகட்டத்தில் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியமைத்து, முதல்வராக நாராயணசாமி இருந்து வந்தார். அவரது ஆட்சியை முழுமையாக நிறைவுபெற விடாமல் பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டுச்சேர்ந்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தது. 2021இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாமக கூட்டணி அமைத்து, என்.ஆர்.காங்கிரஸ் பத்து தொகுதிகளிலும், பாஜக ஆறு தொகுதிகளிலும் வெற்றிபெற்று கூட்டணி ஆட்சி அமைத்து முதல்வராகப் பொறுப்பேற்றார் ரங்கசாமி.

ஆரம்பத்தில் என்.ஆர்.காங்கிரஸுக்கு விட்டுக்கொடுத்து வந்த பாஜக ஒரு கட்டத்தில் முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கிவிட்டது என்கிறார்கள் முதல்வர் ஆதரவாளர்கள்.

இரண்டு அமைச்சர் பதவியும் ஒரு சபாநாயகர் பதவியும் பெற்ற பாஜக, ராஜ்யசபா எம்.பி பதவியையும் பறித்துக்கொண்டது. அதற்கு முன்பு நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி பாஜகவைச் சேர்ந்த ராமலிங்கம், அசோக் பாபு, வெங்கடேசன் மூவருக்கும் வழங்கப்பட்டுவிட்டது.

தற்போது வாரியத் தலைவர் பதவிகளைக் கொடுக்கவேண்டும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டாக வேண்டும், உள்ளாட்சித் தேர்தல் மூலமாகப் புதுச்சேரியில் குக்கிராமங்கள் வரையில் பாஜகவை கொண்டு சென்று அதிகாரத்தில் வளரவேண்டும் என்று பாஜக முடிவுசெய்துள்ளது. இதனால் 60% சதவீத உள்ளாட்சி பதவிகளை கேட்டு வருகிறது,.அதேபோல் வாரியத் தலைவர் பதவிகளையும் அதிமுக மற்றும் பாமகவுக்கு தலா ஒன்று கொடுத்துவிட்டு, பெரும்பாலான வாரிய தலைவர் பதவிகளை பாஜக கைப்பற்றத் திட்டமிட்டுள்ளதாக என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்தான் தலைமைச் செயலாளர் அஸ்வின்குமாரை மாற்றிவிட்டு தனக்கு வேண்டியபட்ட அதிகாரியைத் தலைமைச் செயலாளராக உட்காரவைக்க முயற்சி செய்தார் ரங்கசாமி. அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார் துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜன்.

மற்ற துறை அதிகாரிகளையும் மாற்ற முயற்சிக்கிறார் முதல்வர். ஆனால் முடியவில்லை, 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாகவுள்ளது. அதை நிரப்ப ஆளுநர் மாளிகைக்கு பைல் ஒன்று அனுப்பினார். அதுவும் கிடப்பில் இருப்பதாகச் சொல்லும் முதல்வர் ரங்கசாமி ஆதரவாளர்கள், முதல்வர் சுயமாக செயல்பட முடியவில்லை, எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியவில்லையே என்ற குமுறலில் இருக்கிறார் ரங்கசாமி என்கிறார்கள்.

**-வணங்காமுடி**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *