திருமணத்திற்கு செல்வதற்கு புதிய நிபந்தனைகளுடன் திருமணத்திற்கான இ-பதிவு முறை மீண்டும் சேர்க்கப்பட்டது.
தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கை மக்கள் சரியாக கடைபிடிக்காததால், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு வருகிறது. அதன்படி, காலை 10 மணிவரை மட்டுமே மக்கள் வெளியே சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் எல்லையை தாண்டி செல்லவும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் இ-பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
இ-பதிவு மூலம், மருத்துவம், முதியோர் பராமரித்தல், திருமணம், இறப்பு ஆகியவற்றிற்கு செல்ல முதலில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. திருமணம் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி அதிகமானோர் இ-பதிவு முறையை மேற்கொண்டதால், இ-பதிவிலிருந்து திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டது. மறுபடியும், திருமணப் பிரிவு இ-பதிவில் சேர்க்கப்பட்டு, சிறிது நேரத்திலேயே நீக்கப்பட்டது. இதனால், மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், திருமணத்திற்கான இ-பதிவில் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மணமகன், மணமகள், தாய், தந்தை என இவர்களில் ஒருவர் மட்டுமே இ-பதிவை மேற்கொள்ள வேண்டும். விண்ணப்பதாரரின் பெயர் இ-பதிவில் கட்டாயம் இடம் பெற வேண்டும்
அதன்படி, திருமணப் பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் மட்டுமே இ-பதிவு செய்ய முடியும். ஒரு திருமண நிகழ்விற்கு ஒருமுறை மட்டும்தான் இ-பதிவு செய்ய முடியும்.
திருமண விழாவிற்கு செல்பவர்களின் அத்தனை பேரின் வாகன எண்களையும் ஒரே இ-பதிவில் குறிப்பிட வேண்டும்.
அனைத்து வாகனங்களின் எண்கள், ஓட்டுநர் பெயர், கைபேசி எண் பதிவிட வேண்டும். அதுபோன்று, பயணிக்கும் ஒவ்வொருவருடைய பெயரும், ஏதேனும் ஒரு அடையாள அட்டையும் அவசியம்.
திருமண அழைப்பிதழை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். போலியான தகவல் அளித்து ஒரு நிகழ்வுக்கு அதிக முறை இ-பதிவு செய்தால், சிவில் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
**-வினிதா**
�,