பொன்.ராதாகிருஷ்ணனின் கூட்டணி கருத்து தொடர்பாக டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலளித்துள்ளார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட, பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியின் வேட்பாளர் குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி மாறலாம் எனவும், திமுகவுடன் கூட பாஜக கூட்டணி அமைக்கலாம் எனவும் அவர் தெரிவித்தது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதனால் திமுக கூட்டணியை நோக்கி பாஜக நகர்கிறதா என்ற கேள்விகள் எல்லாம் கூட அரசியல் அரங்கில் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 8) செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், “அதிமுகவுக்கும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. தற்போது ஒரு கூட்டணி தொடர்கிறது. சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் உரிய நேரத்தில் அறிவிப்பார்” என்று குறிப்பிட்டார்.
பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான சூழல் ஏற்படுமா என்ற கேள்விக்கு, “கூட்டணிகள் மாறும், அது எப்படி மாறும் என்பது உள்ளது அல்லவா. காங்கிரசும் பாஜகவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க முடியாது. தேர்தல் நேரத்தில் சில கட்சிகள் திமுக கூட்டணியில் வரலாம் அல்லது இதே கூட்டணி தொடரலாம்” என்று கூறினார். மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் பாஜகவை நாங்கள் எதிர்த்து வருகிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதாவது, காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணியில் பாஜக எப்படி இடம்பெறும் என்ற கேள்வியை முன்வைத்து, பாஜகவுடனான கூட்டணிக்கு வாய்ப்பில்லை என சூசகமாக கூறியுள்ளார் டி.கே.எஸ்.இளங்கோவன்.
**எழில்**�,