�
சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்றிரவு முதல் நாளை இரவு வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் 107 ஏக்கரில் சென்னை உயர் நீதிமன்றம் கட்டப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் 150 ஆண்டு பாரம்பரியமிக்கது. தினமும் ஏராளமான வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வந்துசெல்லும் சென்னையின் பரபரப்பான இடங்களில் ஒன்று சென்னை உயர் நீதிமன்றம்.
ஜார்ஜ்டவுன், பாரிமுனை மற்றும் பூக்கடை பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயர்நீதிமன்ற வளாகத்தை சுற்றி செல்வது அதிக தூரமாக இருப்பதாக கருதி உயர் நீதிமன்ற வளாகத்தை வழிப்பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.
வருங்காலங்களில் மக்கள் நீதிமன்ற வளாக வழிப்பாதைகளை உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காகவும், பழமையான இந்தக் கட்டடத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் வருடத்தில் ஒருநாள் மூடப்படும்.
இந்த நடைமுறை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரத்தில் கடைபிடிக்கப்படும். அதன்படி, இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்றாலும் வழக்கறிஞர்கள் அலுவல் நிமித்தமாகவும், பொதுமக்கள் வழக்கறிஞர்களைச் சந்திக்கவும் நீதிமன்றத்திற்கு வருவது வழக்கம். ஆனால், நாளை வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என யாருக்கும் நீதிமன்றத்தில் நுழைய அனுமதி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
**-வினிதா**
�,