�நான் சொல்வதை ஸ்டாலின் கேட்டால்… -மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் துரைமுருகன்

Published On:

| By Balaji

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (ஜனவரி 16) காலை உடல்நிலை சரியில்லாமல் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலில் ஏற்பட்ட ஒரு காயம் அவரை கடந்த சில நாட்களாக வேதனைப்படுத்தி வந்த நிலையில் இன்று திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் துரைமுருகனை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்த திமுக நிர்வாகிகள் நம்மிடம் பேசினார்கள்.

வெளி மாவட்டத்தில் இருந்து அவரிடம் பொங்கல் வாழ்த்து பெறுவதற்காக சென்றிருந்த எங்களை… திமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச்செயலாளராக இருந்தபோதும் அமரவைத்து ஆசுவாசமாக அன்பொழுகப் பேசினார். அப்போதுதான், கடந்த சில நாட்களாகவே துரைமுருகனுக்கு காலில் ஏற்பட்ட வலி மட்டுமல்ல மனதில் ஏற்ட்ட ஒரு வலியும் எங்களுக்குத் தெரிந்தது.

அண்ணா காலத்தில் தனக்கு ஏற்பட்ட கட்சி அனுபவங்களில் இருந்து தொடங்கி தற்போதைய நிலைமை வரை விவரித்தார். ஒரு கட்டத்தில்… ‘திமுக கூட்டணியில் பாமகவை கொண்டுவந்தால், வெற்றி வாய்ப்பு மென்மேலும் உறுதியாகும். இது எனது அபிப்பிராயம். ஆனால் தலைவரிடம் இதைத் தெரிவித்தும் அவர் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை.

நான் பொதுச்செயலாளர் பதவியேற்றதும் டாக்டர் ராமதாஸ் என்னிடம் போனில் பேசினார். ’உனக்கு இந்தப் பதவிக்கு கிடைச்சதுல, அதிக சந்தோஷம் யாருக்கு சொல்லு?’ என்று என்னிடம் கேட்ட ராமதாஸ், அவரே… ‘ உன்னை விட எனக்கு தான் அதிக சந்தோஷம். நம்ம சமுதாயத்தைச் சேர்ந்தவர் தமிழ்நாட்டின் முக்கிய கட்சியில உச்ச பதவிக்கு வந்திருக்கிறது எனக்கு தான் சந்தோஷம்’ என்று நெகிழ்ந்து போய் சொன்னார். என் மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறவர் நான் சொன்னால் கூட்டணிக்கு வந்து விடுவார்.

இப்போது என்னிடம் தலைவர் ஒ.கே. சொன்னால் போதும்… அடுத்த ஒரு மணி நேரத்தில் டாக்டரிடம் பேசி பாமகவை திமுக கூட்டணியில் சேர்த்து விடுவேன். ஆனால் தலைவர் சம்மதித்தால் தானே..’ என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார் துரைமுருகன்” என்கிறார்கள்.

**வேந்தன்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share