ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தற்போது தமிழக அரசியலில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் 10 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் கரூரைச் சேர்ந்த அண்ணாமலை. கடந்த வருடம் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னுடைய 60 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். வலதுசாரி ஆதரவாளர், ரஜினி கட்சியின் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்றெல்லாம் அடையாளப்படுத்தப்படும் இவர், தன்னை மோடி ஆதரவாளர் என வெளிப்படையாக அறிவித்துக் கொண்டுள்ளார்.
தன்னுடையதும் ஆன்மீக அரசியல்தான், ரஜினியை சந்தித்துப் பேசியுள்ளேன், அவர் கொள்கையை கூறிய பின்னர் அவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து அறிவிப்பேன் என்றும் ஊடகங்களில் பேட்டியளிக்கிறார். இவர் தெரிவிக்கும் கருத்துக்களால் சமூக வலைதளங்களில் விமர்சனங்களையும் எதிர்கொள்வதோடு, இவரது பின்புலமும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.
அரசியலுக்கு வரும் நோக்கத்துடன் செயல்பாடுகளை தீவிரப்படுத்தும் அண்ணாமலையின் தற்போதைய பணிகள் குறித்து விசாரித்தோம்…
அண்ணாமலை பாஜகவில் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போகிறார், ரஜினி கட்சியில் இணைந்து அரசியலில் பயணிக்கவுள்ளார் என்றெல்லாம் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அவர் அதுகுறித்தெல்லாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
தற்போது, ஒவ்வொரு கட்சியின் தலைவர்களையும் சந்தித்து தன்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டு, தன்னுடைய நோக்கம் குறித்து பேசுகிறார். சில தலைவர்களை சந்திக்க அப்பாயின்மென்ட்டும் கேட்டுள்ளார். அரசியல் ஆகட்டும், சமூகம் ஆகட்டும் இப்போது தமிழகத்திற்கு ஒரு புதிய பார்வை தேவை என்று கூறிய அண்ணாமலை யாருடனும் இணையாமல் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து பயணிக்க இருக்கிறார் என்கிறார்கள் அவரது ஆதரவு வட்டாரங்களில்.
**எழில்**�,