வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்: முதல்வர் கடிதம்!

politics

நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக இரங்கல் கடிதம் எழுதியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பசத்திரம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் முப்படைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 14 ராணுவ அதிகாரிகள் சென்ற மிக்-17வி5 என்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் கேப்டன் வருண் சிங் தவிர மற்ற 13 பேரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அமைச்சர்கள், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து கோவை சூலூர் விமான படைதளத்திலிருந்து 13 பேரின் உடல்களும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது பிரதமர், உள்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகியோர் முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு இன்று(டிசம்பர் 10) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” கடந்த டிசம்பர் 8 ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் 13 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு உடனடியாக குன்னூர் விரைந்த முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மீட்புப் பணிகளிலும் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதற்கும் மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி உரிய ஏற்பாடுகளை செய்து தந்திருந்தது.

மேலும், இவ்விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு தனித்தனியாக முதல்வர் இன்று தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து எழுதிய கடிதத்தில், இந்த கடினமான நேரத்தில் மக்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்கிறார்கள் என்றும், இந்த ஈடு செய்ய முடியாத இழப்பிலிருந்து மீண்டுவர பலத்தையும், தைரியத்தையும் நீங்கள் பெறவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *