கொரோனா தொற்று பாதிப்புள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள்,செவிலியர்கள் பணி முடித்துவிட்டு, வீட்டிற்கு செல்லாமல் தனியார் ஹோட்டல்களில் தங்க வேண்டும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த கடந்தாண்டு முதல் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பாதிப்பு ஏற்பட்டவர்கள் மட்டுமில்லாமல், அவர்களை சார்ந்த உறவினர்கள், சுற்றி இருப்பவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். குறிப்பாக, மருத்துவர்களும், செவிலியர்களும் 24 மணி நேரமும் ஓய்வு இல்லாமல், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மற்றவர்களை விட மருத்துவத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கே கூடுதல் பணி சுமை. தங்கள் உயிரை பணயம் வைத்தும், தங்கள் குடும்பங்களை விட்டு வந்தும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.
கடந்தாண்டு கொரோனா தொற்று முதல் அலையின்போது, மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் கொரோனா வார்டுகளில் பணியாற்றும் பணியாளர்கள் என அனைவரும் அருகிலுள்ள தனியார் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். ஏனெனில், இவர்களுக்கு தொற்று பாதிப்பு இருந்து, அது அவர்களின் குடும்பத்தையும் பாதித்து விடக் கூடாது என்பதற்காக, பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று வந்தால், வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள், இல்லையென்றால் ஹோட்டல்களிலே தங்க வேண்டும். இவர்களுக்கு தங்கும் இடம், உணவு உள்ளிட்டவற்றிற்கான கட்டணத்தை அரசே ஏற்று வந்தது. இதுவரை கடைசி தவணை தவிர, மற்ற அனைத்து கட்டணங்களையும் ஹோட்டல்களுக்கு அரசு செலுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரொனா தொற்று குறைந்து வந்தபோது, இந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. அதாவது மருத்துவர்கள்,செவிலியர்கள் பணியை முடித்துவிட்டு, வீட்டிற்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதால், மீண்டும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஹோட்டல்களில் தங்க வேண்டும் எனவும், வீட்டிற்கு செல்லக் கூடாது எனவும் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தனியார் ஹோட்டல்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
**வினிதா**
.�,