சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாக வந்த தகவல் குறித்து சீமான் பதிலளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியை 2010ஆம் ஆண்டு ஆரம்பித்த சீமான் 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 இடங்களிலும் தனித்துப் போட்டியிட்டார். கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியைத் தழுவினார். அதன்பிறகு வந்த 2019 மக்களவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டார். இடைத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறார்.
வரும் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி இல்லை என அறிவித்த சீமான் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் எனவும், அதில் 50 சதவிகிதம் பெண் வேட்பாளர்கள் என்றும் அறிவித்தார்.
பிகார் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்திய ஓவைசி கட்சி, தமிழகத் தேர்தலிலும் களமிறங்கவுள்ள நிலையில் சீமானின் நாம் தமிழர், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ரஜினியை கடுமையாக விமர்சிக்கும் சீமான், கமல்ஹாசனை விமர்சித்ததில்லை. கமல் கட்சி ஆரம்பித்தபோது நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்திருந்தார். இதனால் இந்தத் தகவல் உண்மையாக இருக்குமோ என்ற விவாதங்களும் எழுந்தன.
இந்த நிலையில் தஞ்சையில் நேற்று (டிசம்பர் 17) செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “ஓவைசி மீது எனக்கு மதிப்பு உண்டு. அவ்வளவுதான். நாம் தமிழர் கட்சி ஓவைசி கட்சியுடன் மட்டுமல்ல எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். என்னுடன் யாராவது கூட்டணிக்கு வருவார்களா? சிதறி ஓடிவிடுவார்கள். 234 தொகுதிகளுக்கும் நாங்கள் வேட்பாளரையே இறுதி செய்து விட்டோம். அவர்களும் தொகுதியில் பணிகளை ஆரம்பித்துவிட்டனர்” என்று தெரிவித்தார்.
117ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர் எனவும், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் வேட்பாளராக நிறுத்தி தேர்தல் களத்தில் போட்டியிடுகிறோம் என்றவர், “ரஜினியும், கமலும் இணைவதில் வியப்பில்லை. இருவரும் நண்பர்கள், படங்களில் இணைந்து நடித்தார்கள். அதேபோல இது ஒரு அரசியல் படம். ரஜினி, கமல் இணைவதால் எவ்வித மாற்றமும் நிகழாது” என்றார்.
**எழில்**�,