வரும் ஜூன் 10ஆம் தேதி தமிழகத்திலிருந்து ராஜ்யசபா வுக்கான தேர்தல் தேவைப்பட்டால் நடக்கவிருக்கும் நிலையில்… அதிமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார் யார் என்ற பட்டியல் நேற்று மே 25 இரவு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் படி முன்னாள் சட்ட அமைச்சரும் அதிமுக வழிகாட்டும் குழு உறுப்பினரும் விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி. சண்முகம் ராஜ்யசபாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் முதுகுளத்தூர் ஒன்றிய தலைவருமான தருமர் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சி.வி. சண்முகம் அமைச்சர் பதவி உட்பட பல பதவிகளை வகித்தவர் என்பதால் நன்கு அறிமுகமானவர். அதே நேரம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் ஆன தர்மர் பெரிய அறிமுகம் இல்லாதவர். இவர் தர்மயுத்தம் காலத்திலிருந்தே ஓ. பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருப்பவர். அதனால் தான் இவரை ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்திருக்கிறார் பன்னீர்செல்வம்.
ராஜ்யசபா வேட்பாளர் தேர்வின் முதல் கட்டத்திலேயே சி.வி. சண்முகம் தேர்வாகி விட்டார். ஆனால் இரண்டாவது வேட்பாளர் தனது விசுவாசியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பன்னீர்செல்வம் அதில் போராடி வெற்றி பெற்றுள்ளார்.
இந்த ராஜ்யசபா வேட்பாளர் தேர்வை பார்க்கும் அரசியல் வல்லுநர்கள் ஓ பன்னீர்செல்வம் தான் டம்மி அல்ல என்பதை இந்த நடவடிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என்கிறார்கள்.
**வேந்தன்**