சென்னை ஆட்சியர் மாற்றம்!

politics

சென்னை மாவட்ட ஆட்சியர் விஜய ராணியை மாற்றி புதிய ஐஏஎஸ் அதிகாரியைத் தலைமைச் செயலாளர் இறையன்பு நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு நிர்வாக ரீதியாக அவ்வப்போது மாற்றங்களைச் செய்வது வழக்கம். கடந்த ஆண்டு மே மாதம் புதிய ஆட்சி ஏற்பட்டபோது அரசு நிர்வாகங்களில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டன. ஆட்சியர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோர் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஆனால், கடந்த சில மாதங்களாகப் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இல்லை. இந்த நிலையில் நேற்று தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட உத்தரவில், சென்னை மாவட்ட ஆட்சியராக உள்ள விஜய ராணிக்கு பதிலாகக் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணை செயலாளராக இருக்கும் அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவில் விஜய ராணி மாற்றத்துக்கான காரணத்தையோ அல்லது அவர் வேறு எங்கு மாற்றப்பட உள்ளார் என்ற விவரமோ இடம்பெறவில்லை.
2021 ஜூன் 13ஆம் தேதி திமுக அரசு 24 மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது. அப்போது 2013ஆம் ஆண்டு ஐஏஎஸ் கேடரை சேர்ந்த விஜய ராணி சென்னை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். ஓராண்டுக் காலம் கூட முடிவடையாத நிலையில், அவர் தற்போது மாற்றப்பட்டுள்ளார். குறிப்பாக அவருக்கு வேறு எந்த துறையிலும் பதவி ஒதுக்கப்படாததால், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளாரா, ஏன் இந்த திடீர் மாற்றம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *