டெல்லி உயர் நீதிமன்றம் கிஷோரி யோஜனா திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை வழங்குவதை நிறுத்தியதற்காக மாநில அரசு மீது அதிருப்தி தெரிவித்தது. டெல்லி அரசுப் பள்ளிகளில் ஜனவரி 2021 முதல் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுவதில்லை, இதனால் மாணவிகளுக்குப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கை தற்காலிக தலைமை நீதிபதி விபின் சங்கி தலைமையிலான அமர்வு விசாரித்தது.
இந்த விசாரணையின் போது, நீதிபதி சச்சின் தத்தா அடங்கிய அமர்வு, ஏற்கனவே உள்ள ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டாலோ அல்லது நிறுத்தப்படும் சூழ்நிலையில், இதை சமாளிக்க ஒரு கொள்கையை உருவாக்குமாறு நகர அரசாங்கத்தை கேட்டுக் கொண்டது. சானிட்டரி நாப்கின் விநியோகம் தொடர்பான முந்தைய டெண்டர் ரத்து செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய அரசு வழக்கறிஞர், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முன் புதிய டெண்டர் விடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அளிக்க பட்ட மனுவில், “பெண் மாணவர்களின் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது இல்லாதது அவர்களின் படிப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண் மாணவர்களுக்கு சானிட்டரி நாப்கின்களை விநியோகிக்க அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைவர்களுக்கு சுற்றறிக்கைகளை அனுப்ப வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்வி துறை கூறுகையில், “பெண் மாணவர்களுக்கு சானிட்டரி நாப்கின்களை வழங்காதது பகுத்தறிவற்றது, நியாயமற்றது, தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பெண் மாணவர்களின் கல்விக்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும்.” என்று தெரிவித்துள்ளது.
.