ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.
7.5 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க தனக்கு இன்னும் 3-4 வாரங்கள் அவகாசம் வேண்டுமென ஆளுநர் தெரிவித்திருக்கும் நிலையில், அதற்கு எதிராக திமுக போராட்டம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்குத் தடை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டி, ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான திருமாவளவன், குடியரசுத் தலைவருக்கு நேற்று (அக்டோபர் 22) எழுதியுள்ள கடிதத்தில், “அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண்-155இன் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தாங்கள் ஆளுநரை நியமிக்கிறீர்கள். அரசியலமைப்புச் சட்ட உறுப்பு எண்-163, ஆளுநரானவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்று தெளிவாக வரையறுத்துள்ளது.
ஆனால், தற்போதுள்ள தமிழக ஆளுநர் மேதகு பன்வாரிலால் புரோஹித் அவர்கள், இந்த அரசியலமைப்புச் சட்டக் கடமையை நிறைவேற்றாமல் இருப்பது மட்டுமின்றி மாநில அரசின் செயல்பாடுகளுக்குப் பல்வேறு தடைகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்” என்று விவரித்துள்ளார்.
இந்திய உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 2020இல் வழங்கிய தீர்ப்பிலும், சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 2020இல் வழங்கிய தீர்ப்பிலும் இட ஒதுக்கீட்டுக்கு உள்ளே உள் ஒதுக்கீடு செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது” என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த திருமாவளவன், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டதாகும். ஆனால், தமிழக ஆளுநர் அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் தேவையற்ற கால தாமதத்தைச் செய்து கொண்டிருக்கிறார்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு தவிப்புடன் காத்திருக்கிறார்கள். மாநில அரசும் அதற்கான கலந்தாய்வு செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டது. ஆனால், ஆளுநரின் முரண்பட்ட அணுகுமுறை மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடவடிக்கை அனைத்தையும் சீர்குலைத்திருக்கிறது.
ஆளுநர் தமிழக அரசுக்குத் தடை போடுவது மட்டுமின்றி, அரசியல் அமைப்பு சட்டச் சிக்கலையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இது ஜனநாயகத்துக்குப் பெறும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது.எனவே, இவற்றையெல்லாம் கவனத்தில்கொண்டு, தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற்று அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்றும் திருமாவளவன் குடியரசுத் தலைவருக்கு வலியுறுத்தியுள்ளார்.
*எழில்*�,”