தான் இறந்து விட்டதாக வெளியான தகவலுக்குச் சாமியார் நித்யானந்தா, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்று பதிலளித்துள்ளார்.
சர்ச்சைக்கு பெயர் போனவர் நித்யானந்தா. பாலியல் வழக்கில் சிக்கியுள்ள நித்தியானந்தா தற்போது தலைமறைவாக உள்ளார். குறிப்பாக குஜராத் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்த சிறுமிகளைக் கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நித்யானந்தா தற்போது தேடப்பட்டு வருகிறார். அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியாத நிலையில் தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பெயர் கைலாச நாடு என்றும் அறிவித்தார்.
அதோடு தினசரி வீடியோக்களை வெளியிடுவது நித்தியானந்தாவின் பழக்கம். இந்த சூழலில் நித்யானந்தா நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதாக தகவல்கள் பரவின. அதே சமயத்தில் அவரது வீடியோ வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு நித்யானந்தாவின் ஆதரவாளர்களால் வெளியிடப்படுகிறது என்று கூறப்பட்டது.
இதனால் நித்யானந்தா மரணம் அடைந்து விட்டாரா என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த சூழலில் நித்தியானந்தா கைப்பட எழுதிய குறிப்பு ஒன்றில் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள ஒரு குறிப்பில், நான் சாகவில்லை, சிவ சிவ… திரும்பி வந்துவிட்டேன். பிழைகளுக்கு மன்னிக்கவும். வெறுப்பாளர்கள் நான் இறந்து விட்டதாக வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். நான் சமாதி மனநிலையில் இருக்கிறேன். என்னால் முழுமையாக இன்னும் யாருடைய பெயரை நினைவுபடுத்தவோ, இடத்தையோ, நினைவுகளையோ மீட்டுக் கொண்டு வருவதில் சிரமப்படுகிறேன்.
27 மருத்துவர்கள் எனக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கின்றனர். மருத்துவச் சிகிச்சையில் இருந்து இன்னும் நான் வெளியே வரவில்லை. நித்ய பூஜைகள் மட்டும் தினசரி நடக்கின்றன. இன்னும் என்னால் எழுந்திருக்கவோ அல்லது உணவு உண்ணவோ முடியவில்லை. சில நேரங்களில் உங்களுடைய கருத்துக்களைப் பார்த்து என்னுடைய பதில்களை அளித்து வருகிறேன்.
உங்களுடைய அன்புக்கு நன்றி. பக்தர்களின் வேண்டுதலால் குணமடைந்து வருகிறேன். பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள். என் உடம்புக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. விரைவில் பூரண குணமடைவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த குறிப்போடு நித்யானந்தா சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் உடல் நலிவுற்று இருப்பது தெரியவருகிறது.
**-பிரியா**