தருமபுரம் ஆதீனத்தில் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கொடுத்தது பற்றி மதுரை ஆதீனம் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.
இன்று (மே 9 ) செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம்,
“தருமபுரம் ஆதீனத்தில் பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று முதல்வருக்கும் அறநிலையத் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். அவர்கள் ஆலோசனை செய்து பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு என் ஆசிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் சொன்ன கருத்துக்களை வெளியிட்ட ஊடக நண்பர்களுக்கும் என்
நன்றிகள், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கு ஆதரவாக பேசிய பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி அவர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சி அண்ணாமலை அவர்களுக்கும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களுக்கும், சோலை கண்ணன் அவர்களுக்கும் மற்றும் சிவனடியார்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
முதல்வருக்கு இப்போது இன்னொரு கோரிக்கையையும் வைக்கிறேன். முதல்வர் எல்லாருக்கும்தான் முதல்வர். எல்லா மதங்களைச் சேர்ந்த சம்பிரதாயங்களையும் மதித்து எல்லா மதங்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வளவு சீக்கிரம் முதல்வர் இதற்கு அனுமதி அளிப்பார் என நான் நினைக்கவில்லை.
அதற்கும் மேலே நம்முடைய திராவிடர் கழகத் தலைவர் அய்யா வீரமணி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இதை ஆரம்பிக்காவிட்டால், பட்டினப்பிரவேசம் என்றால் என்னவென்று யாருக்கும் தெரியாது. இன்றைய தினம் இது வெளி மாநிலங்களுக்கு எல்லாம் தெரிந்து விட்டது. இது சைவத்துக்கு இனிப்பான செய்தி” என்று குறிப்பிட்டார் மதுரை ஆதீனம்.
**வேந்தன்**