அரசியல் பயணம் எப்போது தொடங்குவீர்கள் என்ற கேள்விக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பதில் அளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சிறை சென்று வந்த சசிகலா தீவிர அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தான் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அவரிடம் கொடநாடு கொள்ளை கொலை வழக்கு குறித்து இரண்டு நாட்கள் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 26) சசிகலா சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சி புறப்பட்டுச் சென்றார். அப்போது விமான நிலையத்தில் சசிகலாவிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.
அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு மற்றும் அரசியலுக்கு வருவது எப்போது என்று கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த சசிகலா, “விரைவில் அரசியல் பயணத்தைத் தொடங்குவேன். அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு தொடர்பாக நிச்சயம் உயர் நீதிமன்றத்திற்குச் செல்வேன் என்று பதிலளித்தார்.
அதைத்தொடர்ந்து விமானம் மூலம் திருச்சி வந்து இறங்கிய சசிகலாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.
உங்களது அரசியல் பயணம் தனியாகவா அல்லது கூட்டணிக் கட்சியுடனா என்ற கேள்விக்கு
‘பொறுத்திருந்து பாருங்கள்’ என்று பதிலளித்தார்.
உங்களை வரவேற்கும் அமமுகவினரை தினகரன் நீக்குகிறாரா? என்ற கேள்விக்கு, பதிலளிக்காமல் கோயிலுக்குச் செல்கிறேன் என்றார்.
**-பிரியா**