தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்த்துக்கு நன்றி கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த பிப்ரவரி 28 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். மு.க.ஸ்டாலின் தனது பள்ளி கல்லூரி காலங்கள், இளமைப் பருவம், அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 23 ஆண்டு கால நினைவுகளை அதில் எழுதியுள்ளார்.
இந்நிலையில் உங்களில் ஒருவன் புத்தகத்தைப் படித்து பார்த்து பாராட்டிய நடிகர் ரஜினி காந்த்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “‘உங்களில் ஒருவன்’ படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்துக்கு நன்றி!
உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தையும் அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
**-பிரியா**