முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில்,வரலாற்றில் முதன் முறையாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக 2022-23ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இதற்கு முன்னதாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
வேளாண் பட்ஜெட்டை முன்னிட்டு சில சட்டமன்ற உறுப்பினர்கள் வித்தியாசமான முறையில் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பி.ராஜா, அம்பேத்குமார் ஆகியோர் பாரம்பரிய நெல் ரகமான குழியடிச்சன் நெல் ரகத்துடன் சட்டப்பேரவைக்கு வந்தனர்.
அதுபோன்று, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜிகே மணி மற்றும் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான மேட்டூர் சதாசிவம், தர்மபுரி வெங்கடேஷ்வரன், சேலம் அருள், மைலம் சிவகுமார் ஆகியோர் பச்சை நிற துண்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
**-வினிதா**