உக்ரைன் ரஷ்யா போர் எதிரொலியாகத் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தத் தொடங்கியது. இதன் காரணமாக அதிரடியாகத் தங்கத்தின் விலை உயர்ந்தது. ஒரு பவுன் தங்கத்தின் விலை 40 ஆயிரம் ரூபாய் வரை நெருங்கியது.
அதன்பின் விலை குறைந்து ரூ.38 ஆயிரத்துக்குக் கீழ் வந்தது. இதுபோன்று தங்கத்தின் விலை சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில் இன்று 40 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 40 ,440 ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. ஒரு கிராம் பவுன் 5055 ரூபாயாக உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் உலகம் முழுவதும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்ந்து வரும் நிலையில் தங்கம் விலையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெரும் அளவில் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறித் தங்கத்தின் தங்களது முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் புலம்பி வருகின்றனர்.
வெள்ளி விலை 1.80 பைசா உயர்ந்து ரூ.75.20க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.75,200 ஆக உள்ளது.
**-பிரியா**