பதவியேற்ற 6 வருடங்களில் முதல் முறையாக அயோத்திக்கு சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று வருகிறது. இதற்காக டெல்லியிலிருந்து விமானம் மூலம் இன்று (ஆகஸ்ட் 5) காலை லக்னோ சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அயோத்திக்கு சென்றார். அவரை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்று அழைத்துச் சென்றார்.
அயோத்தியில் உள்ள அனுமன் ஹனுமன் கர்கி கோயிலில் வழிபட்ட பிரதமர், ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலில் தரையில் நெடுஞ்சான் கிடையாய் விழுந்து தரிசனம் மேற்கொண்டார். அங்கு பாரிஜாத மலர்க் கன்றுகளையும் நட்டுவைத்தார். அடிக்கல் நாட்டு விழாவுக்கான சிறப்பு பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் மையமாக ராம்ஜென்ம பூமியில் 40 கிலோ வெள்ளி செங்கலை வைத்து ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக கோவில் நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஊதா மற்றும் பச்சை நிறத்தில் ஒளிருகிறது
இந்த நிலையில் பிரதமருக்கும் அயோத்திக்குமான கூடுதல் தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது. அதாவது, பிரதமராக தற்போதுதான் முதல்முறையாக அதுவும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்காக செல்கிறார் மோடி. 1991 ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரளிமனோகர் ஜோஷி நடத்திய திரங்கா யாத்திரையின்போதுதான் அவர் கடைசியாக அயோத்தி சென்றுள்ளார்.
அதன்பிறகு 29 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் அயோத்தி நகரத்திற்குள் காலடி வைத்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட அயோத்தியின் எல்லைப் பகுதிகளான பைசாபாத், அம்பேத்கர் நகர் பகுதிகளில் மட்டும்தான் பொதுக்கூட்டங்களில் பேசினாரே தவிர அயோத்திக்குள் நுழையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
**எழில்**
.�,