[திமுக போட்டி வேட்பாளர்கள் வெற்றி!

politics

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் நேற்று முன்தினம் மாமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர். இதையடுத்து மேயர், துணை மேயர், பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.

இந்த நிலையில், கன்னியாகுமரியில் குளச்சல், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய நகராட்சிகளில் போட்டி திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

**குழித்துறை**
குழித்துறை நகராட்சி சேர்மன் வேட்பாளராக திமுக சார்பில் பெர்லின் ஷீபாவை கட்சி தலைமை அறிவித்தது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் பெர்லின் ஷீபாவை எதிர்த்து, குழித்துறை நகர திமுக செயலாளர் பொன் ஆசைத்தம்பி, காங்கிரஸ் சார்பில் பிரபின் ராஜா ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் போட்டி திமுக வேட்பாளர் பொன் ஆசைத்தம்பி 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக தலைமை அறிவித்த பெர்லின் ஷீபா 9 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
**குளச்சல்**

குளச்சல் நகராட்சியில் திமுக சார்பில் ஜான்சன் சார்லஸ் போட்டியிடுவார் என்று திமுக அறிவித்திருந்தது. இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் அவரை எதிர்த்து திமுக போட்டி வேட்பாளராக நசீர் போட்டியிட்டார்.

குளச்சலில் மொத்தமுள்ள 24 கவுன்சிலர்களில் நசீர் மற்றும் ஜான்சன் சார்லஸ் ஆகியோர் தலா 12 வாக்குகள் பெற்றனர். இதையடுத்து குலுக்கல் தேர்வுமுறை நடத்தப்பட்டது. இதில் பாஜக ஆதரவுடன், திமுக போட்டி வேட்பாளர் நசீர் சேர்மன் பதவியை கைப்பற்றினார்.

**கொல்லங்கோடு**

கொல்லங்கோடு நகராட்சி சேர்மன் பதவி திமுக கூட்டணி கட்சியான சி.பி.எம்முக்கு ஒதுக்கப்பட்டது. இன்று நடைபெற்ற தேர்தலில் சி.பி.எம் வேட்பாளர் லலிதாவை எதிர்த்து திமுக போட்டி வேட்பாளராக ராணி களமிறங்கினர். பாஜக சார்பில் சுதா போட்டியிட்டார்.

இதில் சி.பி.எம் லலிதாவுக்கு 10வாக்குகளும், திமுக ராணிக்கு 18 வாக்குகளும், பாஜக சுதாவுக்கு 5 வாக்குகளும் கிடைத்தன. அதனால், போட்டி திமுக வேட்பாளர் ராணி வெற்றிபெற்றார்.

மேலே குறிப்பிட்டுள்ள நகராட்சிகளில் கட்சி தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *