இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், வெற்றி பெறும் வேட்பாளர்கள் தங்கள் சந்தோஷத்தை சத்தமிட்டு கத்தியும், அழுதும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சியில் 30வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று அந்தோணியார் பள்ளியில் நடந்து வருகிறது. இதில் 26வது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ராஜ்குமார் என்பவர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். இதை கேட்ட அவர், சந்தோஷத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், தான் இருக்கும் அறை அதிரும் வகையில் கத்தி கூச்சலிட்டார். சத்தமாக ‘நான் ஜெயிச்சுட்டேன் டா’ என்றுக் கூறி கத்தினார். அங்கிருந்தவர்கள், சரி, சரி என்று அவரை ஆசுவாசப்படுத்தினார்கள்.
அதுபோன்று சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் 11க்கு உட்பட்ட 13 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை மதுரவாயல் அடையாளம்பட்டு எம்ஜிஆர் கல்லூரியில் நடந்து வருகிறது. இதில் 145 வது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட சத்தியநாதன் என்பவர், திமுக வேட்பாளர் ஆலன் என்பவரை விட 1,895 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தான் வெற்றி பெற்றதை தேர்தல் அதிகாரிகள் அறிவித்ததும், தன்னை அறியாமல் கண் கலங்கிய சத்தியநாதன், அதிகாரிகளை பார்த்து இருகை கூப்பி கும்பிட்டு, கதறி கதறி அழுதார். அதன்பின்பு, அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.
**வினிதா**