அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மண்டல செயலாளர்கள் கூட்டம் இன்று ஜனவரி 27 பிற்பகல் அக்கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இந்த நிகழ்வுக்காக கட்சி தலைமையகத்துக்கு வந்திருந்தார்.
துணைப் பொதுச் செயலாளர்கள் செந்தமிழன், ரங்கசாமி, பொருளாளர் மனோகரன் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகளோடு மண்டல செயலாளர்களை சந்தித்தார் தினகரன்.
உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் உறுப்பினர் அட்டை விவகாரத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று மண்டல செயலாளர்களிடம் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கு முன்பே சொல்லி விட்டனர்.
இதை ஒட்டி டிடிவி தினகரன் உள்ளாட்சித் தேர்தல் பற்றி மண்டல செயலாளர்களிடம் பேசினார்.
உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் நாம் கண்டிப்பாக போட்டியிட வேண்டும். எனவே இதை மாவட்ட செயலாளர்களிடம் சொல்லி வேட்பாளர் பட்டியலை விரைவில் தயார் செய்யுங்கள்” என்று மண்டல செயலாளர்களிடம் கூறியுள்ளார் டிடிவி தினகரன்.
இதன் பிறகு ஒவ்வொரு மண்டல செயலாளரும் தினகரனை தனித்தனியாக சந்தித்து பேச அனுமதி கேட்டனர். தலைமைக் கழக நிர்வாகிகளை வைத்துக்கொண்டு ஒவ்வொரு மண்டல செயலாளரிடமும் தினகரன் பேசியுள்ளார்.
அப்போது பெரும்பாலான மண்டல செயலாளர்கள், “திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்கிறார்கள். நாமும் செலவு செய்தால் குறிப்பிடத்தக்க இடங்களை பிடிக்கலாம்”என்று தினகரனிடம் அழுத்தம் கொடுத்துள்ளார்கள்.
அதற்கு தனது வழக்கமான புன்னகையை பதிலாக உதிர்த்த தினகரன் ‘அதெல்லாம் பார்த்துக்கலாம் பேசிக்கலாம்’ என்றே கூறியிருக்கிறார். எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை.
இதையடுத்து கூட்டம் முடிந்ததும் பத்திரிகையாளர்களை சந்தித்தார் டிடிவி தினகரன்.
“ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நீங்கள் சொல்லிக்கொள்ளும்படி வெற்றி அடையவில்லை. இந்த தேர்தல் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு…
“இரண்டு தடவை தோத்துட்டா மூடிட்டு போறதுக்கு இது என்ன பிசினஸா? நான்தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே.. இறுதி மூச்சு உள்ளவரை போராடுவோம்” என்று பதிலளித்தார் தினகரன்.
தேர்தல் பிரச்சாரத்துக்கு சசிகலா வருவாரா என்ற கேள்விக்கு…
“நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். நான் அவரது அபீஷியல் ஸ்போக்ஸ் பர்சன் இல்லை” என்று பதிலளித்தார் தினகரன்.
ஏற்கனவே சசிகலாவை சந்தித்தவர்கள் எல்லாம் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில்… சசிகலாவின் விருப்பத்துக்கு மாறாகத் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தினகரன் போட்டியிடுகிறார் என்கிறார்கள் அமமுக நிர்வாகிகளே.
**வேந்தன்**
[டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு!](https://www.minnambalam.com/politics/2022/01/27/27/ammk-membership-card-localbody-election-ttv-dinakaran-sasikala)
�,”