எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமையகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் மரியாதை செலுத்தினர்.
நடிகர், அதிமுக நிறுவனர், முன்னாள் முதல்வர் என பன்முகத் தன்மையுடன் வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆரின் 105ஆவது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு சென்னை – கிண்டியில் உள்ள அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேராசியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதிமுகவின் சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதுபோன்று ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சி அலுவலகத்தில் உள்ள கொடியை ஏற்றி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதனிடையே ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.ஜி.ஆர் வழியில், அம்மா வகுத்துக் கொடுத்த பாதையில் பயணித்து “மீண்டும் அஇஅதிமுக ஆட்சியைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்துவோம்” என இந்நாளில் உறுதியேற்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுபோன்று ஈபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “அள்ளி அள்ளிக் கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர், கடைநிலை தொழிலாளியையும் மதிக்கும் பண்பாளர்,சரித்திர திட்டங்களால் தமிழகத்தின் தாயுமானவராய் வாழ்ந்து,கோடிக் கணக்கான இதயங்களில் அழியாப் புகழுடன் இதயதெய்வமாக வீற்றிருக்கும் எங்கள் புரட்சித்தலைவர்105 பிறந்தநாள் புகழ் வணக்கங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, தி.நகர் நினைவு இல்லத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், சென்னையில் உள்ள தனது வீட்டில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
**-பிரியா**
�,”