கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு, முடிவு வருவதற்கு முன்பே தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ தொகுப்பு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மொத்தம் 1,18,017 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 144 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர சென்னையில் நேற்று ஒருநாள் மட்டும் 8963 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 46,581 பேர் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார மையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில் தொற்று அறிகுறி உள்ள நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளத் தடவல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். பெருநகர சென்னை மாநகராட்சி தடவல் சேகரிப்பு மையங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு முடிவிற்காகக் காத்திருக்கும் நபர்கள் வீடுகளில் இருக்கும் நேரங்களில் அவர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டும், தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு மாநகராட்சியால் நாளை முதல் வழங்கப்படவுள்ளது.
இந்த மருந்து தொகுப்பில் வைட்டமின் சி (Vitamic C), ஜின்க் (Zinc), பாராசிட்டமால் (Paracetamol), ஆகிய மாத்திரைகள், கபசுரக் குடிநீர் மற்றும் மூன்றடுக்கு முகக்கவசங்கள் போன்ற மருத்துவப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் தேவைப்படும் நபர்களுக்கு மட்டும் அசித்ரோமைசின் (azithromycin) போன்ற நோய் எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-பிரியா**
�,