கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப் பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
கடந்த ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. உணவு டெலிவரி நிறுவனங்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், வரும் 16-01-2022 – ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் சிறப்புப் பேருந்துகள் கூட இயங்காது என்று அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் ஊரடங்கில் சிறிய தளர்வை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதன்படி, வரும் ஜனவரி 16ஆம் தேதி முழு ஊரடங்கின்போது பால் மற்றும் மருந்துகள் விநியோகம் செய்யும் மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்நிறுவன ஊழியர்களுக்குக் காவல் துறையினர் ஒத்துழைப்பு நல்குவார்கள் என்று கூறியுள்ளது.
அதுபோன்று மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு இதுவரையில் 200 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது. இனி இந்த அபராதத் தொகை 500 ரூபாய் ஆக உயர்த்தப்படுவதாகவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
**-பிரியா**
�,