நடிகர் விஷாலின் அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பினை குறும்பட இயக்குநருக்குக் கொடுத்திருக்கிறார்.
வருடத்துக்கு இரண்டு படம் கொடுத்துவிடும் நடிகர் விஷால். 2018ல் இரும்புத்திரை, சண்டைக்கோழி2, 2019ல் சக்ரா & ஆக்ஷன் படங்கள் வெளியானது. 2020ல் வெளியாகியிருக்க வேண்டிய துப்பறிவாளன் 2 படம் கொரோனாவினால் தள்ளிப் போனது. சென்ற வருடத்துக்கும் சேர்த்து இந்த வருடம் நான்கு படங்கள் ரிலீஸ் செய்துவிட டார்கெட் செய்து நடித்து வருகிறார்.
ஏற்கெனவே, எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் சக்ரா ரிலீஸாகிவிட்டது. அடுத்ததாக, ஆர்யாவுடன் எனிமி படத்தில் நடித்துவருகிறார். இப்படமும், இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டிவிட்டது. தொடர்ந்து, துப்பறிவாளன் 2 படத்தையும் இயக்கி நடித்துமுடிக்க இருக்கார்.
இந்நிலையில் அடுத்தப் படத்துக்குக் குறும்பட இயக்குநர் ஒருவரை டிக் செய்திருக்கிறார் விஷால். கடந்த சில ஆண்டுகளாகவே குறும்படங்கள் வாயிலாக தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வெள்ளித்திரைக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாலாஜி மோகன், கார்த்திக் சுப்பராஜ், அருண்குமார், ரவிக்குமார் என தமிழின் இளம் தலைமுறை இயக்குநர்கள் குறும்படத்திலிருந்து திரைத்துறைக்குள் வந்தவர்களே.
விஷாலை இயக்கப் போகும் குறும்பட இயக்குநர் பெயர் சரவணன். இவர், ‘எது தேவையோ அதுவே தர்மம்’ எனும் விருது வென்ற குறும்படத்தை இயக்கியவர். கடந்த வருடம் இந்த குறும்படத்தைப் பார்த்த விஷாலுக்கு மேக்கிங் ஸ்டைல் பிடித்துவிட்டதாம். அவரை உடனடியாக அழைத்துக் கதை ஒன்றையும் கேட்டிருக்கிறார். சரவணன் சொன்ன கதை விஷாலுக்குப் பிடித்துப் போகவே, ஸ்கிரிப்ட் வேலையைத் துவங்க சொல்லியிருக்கிறார். தற்பொழுது, இந்தப் படம் உடனடியாகத் துவங்க இருக்கிறதாம். எப்படியும், வருகிற ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கும் என்று சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க சென்னையிலேயே படத்தை முடிக்கவும் திட்டமாம்.
கூடுதல் தகவல் என்னவென்றால், இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவை இசையமைக்க வைக்கவும் பேச்சுவார்த்தைத் தீவிரமாக நடந்துவருவதாகவும் சொல்கிறார்கள்.
**- ஆதினி**
�,