�
நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து சமூக ஊடகங்களில் சில செய்திகள் வலம் வரும் நிலையில், அது குறித்து அவரது பெற்றோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் சிம்புவை மையப்படுத்தி காதல், திருமணம் என்று தொடர்ந்து ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த சில தினங்களாக நடிகர் சிம்புக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாகவும், லண்டனை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரின் மகள் விரைவில் சிம்புவின் மனைவியாகவிருக்கிறார் என்றும் செய்திகள் பகிரப்பட்டு வந்தது.
கொரோனா பிரச்னைகள் முடிவடைந்ததும் அவரது திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த செய்திகளில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்து, அவரது பெற்றோர்களான டி.ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும், இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன.
இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை. எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்ணை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம்.
அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்”என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”