நல்ல கதைகள், நாயகி முக்கியத்துவம் கொண்டப் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் ஜோதிகா. 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தவருக்கு அடுத்தடுத்து பல படங்கள் கவனம் ஈர்த்தன. பெரும்பாலும் சூர்யாவின் 2டி தயாரிப்பில் படங்களை நடிக்கிறார். அதோடு, மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்தவானம், பாலா தயாரிப்பில் நாச்சியார், ஜீத்துஜோசப் இயக்கத்தில் தம்பி மாதிரியான மற்ற தயாரிப்பு நிறுவனப் படங்களிலும் நடிக்கிறார். சென்ற வருடம் ஜோதிகாவுக்கு பொன்மகள் வந்தாள் படம் கொரோனா லாக்டவுன் நேரத்தில் வெளியானது.
தற்பொழுது, ஜோதிகா நடிக்கும் அடுத்து வெளியாக இருக்கும் படத்தை கத்துக்குட்டி படத்தை இயக்கிய சரவணன் இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக வெளியானது. ஜோதிகாவுடன் சசிகுமார், சமுத்திரகனி, சூரி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தஞ்சை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்துவருகிறது.
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க வேல்ராஜ் ஒளிப்பதிவில் டி.இமான் இசையில் படம் உருவாகிவருகிறது. சமீபத்திய ஒரு நேர்காணல், இந்தப் படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்துகொண்டார் சசிகுமார். அதன்படி, ஜோதிகாவுக்கு தம்பியாக சசிகுமார் நடித்திருக்கிறாராம். அதோடு, ஜோதிகாவுக்கு கணவர் ரோலில் சமுத்திரகனி நடித்திருக்கிறார்.
எமோஷனல் பேமிலி டிராமாவாக உருவாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. நேர்மையான கணவருக்கும், அடிதடி செய்யும் தம்பிக்கும் நடுவில் நடக்கும் உறசல், அதை சமாளிக்கும் நாயகியின் கதையாக இருக்கும் என்கிறார்கள்.
ஏற்கெனவே, தம்பி படத்தில் ஜோதிகாவுக்குத் தம்பியாக கார்த்தி நடித்திருந்தார். இந்நிலையில் மீண்டும், ஜோதிகாவின் சகோதரர் ரோலில் ஒரு பெரிய நடிகர் நடித்திருக்கிறார். எப்படியும், ஜூன் மாதத்தில் இந்தப் படம் வெளியாகும் என்று சொல்கிறார்கள்.
**- ஆதினி**
.�,