நடிகர் அஜித்குமார் மகன் ஆத்விக் பிறந்தநாளை முன்னிட்டு தனது குடும்ப உறுப்பினர்களுடன் அஜித்குமார் எடுத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது.
அஜித்குமார், எந்தவொரு சமூக வலைதளத்திலும் நேரடியாக தனது கருத்துகளை, புகைப்படங்களை வெளியிடுவது இல்லை. ஆனால், அவர் சம்பந்தமான புகைப்படங்கள், அறிக்கைகள் அதிகாரபூர்வமாக அவரது பத்திரிகை தொடர்பாளர் அல்லது நண்பர்கள் வாயிலாக வெளியிடப்படும். அஜித்குமார் அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் பேசும் பொருளானதற்கு காரணம், அவர் நடிக்கவுள்ள 61வது படத்தின் கெட்டப் உடன் அஜித்குமார் இருப்பதாக கூறப்பட்டது. அதனால், எந்தவித சர்ச்சைகளும் இல்லாமல் அஜித்குமார் புகைப்படம் செய்தியாகி,பேசும் பொருளாகி முடிந்துபோனது.
இந்த நிலையில் அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த நடிகை கஸ்துாரி, “ தலைவரெல்லாம் தலைக்கு பொய்யையும், மையையும் போர்த்திக் கொள்ளும் நாட்டில், தல அஜித்தின் தனித்துவம் அழகு. நரையில் தெரியும் நேர்மை அழகோ அழகு.
அழகான குடும்பம், சுத்தி போடுங்க” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்கள் இயல்பாக இல்லாமல் நரை விழுந்த முடிகளுக்கு கறுப்பு சாயம் பூசி நடமாடுவதையும், செயற்கையான விக் வைத்துக் கொண்டு வரும் தலைவர்களையும் மறைமுகமாக நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
**இராமானுஜம்**