யுவன்சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் மாமனிதன்.
இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இருவரும் முதல் முறையாக இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இப்படம் ஜூன் 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. ஸ்டூடியோ 9 சார்பில் ஆர்.கே. சுரேஷ் இப்படத்தை வெளியிடுகிறார்.
இப்படத்தின் பத்திரிக்கை ஊடக சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது
அப்போது நடிகர் விஜய் சேதுபதி கூறுகையில், “நீங்க நடித்தால் நானும் – அப்பாவும் ம்யூசிக் பண்றோம் என யுவன் ஒரு நாள் சொன்னார். அப்படி துவங்கிய படம்தான் மாமனிதன். மிகப்பெரிய விஷயத்தை எளிமையா சொல்லக் கூடிய இயக்குநர் சீனு ராமசாமி. அப்படிதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். நான் நடிகனாக ஆசைப்பட்ட காலத்தில் குருசோம சுந்தரம் போல் நடிக்க வேண்டும் என ஏக்கம் இருக்கும். அப்படிப்பட்ட நடிகர் குரு சோமசுந்தரம். அவருடன் நடித்தது மகிழ்ச்சி.
இந்த படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் தான் காரணம். மூன்று இடங்களில் நடக்க கூடிய கதையை இவ்வளவு சீக்கிரம் எடுத்து முடிக்க இருவர்களுடைய அர்பணிப்பு தான் காரணம். பலர் நடிக்க ஒத்துகொள்ளாத கதாபாத்திரத்தை காயத்ரி ஏற்றுகொண்டு நடித்துள்ளார். அவருடைய திறமைகள் இன்னும் வெளிக்கொண்டு வரப்படவில்லை. இந்த படம் நம்முடைய கதையை கூறுவது போல் இருக்கும். யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து என் படத்திற்கு இசையமைக்க போகிறார்கள் என்ற வாய்ப்பு எனக்கு வந்தபோது, சீனுராமசாமி தான் இந்த படத்தை இயக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். இந்த படம் ஒரு பெரிய அனுபவமாக பார்ப்பவர்க்கு இருக்கும்” என தெரிவித்தார்.
இயக்குனர் சீனுராமசாமி கூறுகையில், “இந்த திரைப்படம் மூலமாக உலகமே விஜய் சேதுபதியை திரும்பிபார்க்க வேண்டும் என்று நான் விருப்பப்பட்டேன். முதலில் இந்த படத்தில் கார்த்திக் ராஜா- யுவன் சங்கர் ராஜா – இளையராஜா இசையமைப்பதாக இருந்தது. பின்னர் கார்த்திக் ராஜா ஒரு சில காரணத்தால் விலகிவிட்டார். இந்த கதை பலரால் நிராகரிக்கப்பட்டது. அப்போது தான் விஜய் சேதுபதி என்னை அழைத்தார். பின்னர் இந்த படம் ஆரம்பமானது. இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்க முடிவெடுத்த போது, நான் அவர்களுக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த படம் இளையராஜா அவர்கள் வாழ்ந்த இடத்தில் படமாக்க விரும்பினேன். அவர் வாழ்ந்த தேனி பண்ணைபுரத்தில் இந்த படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டது.
மாமனிதன் படத்தின் பாடல் கம்போஸிங்கின்போது என்னை அழைக்கவில்லை. மாமனிதன் பாடலின் ரீ-ரெக்கார்டிங் மற்றும் கம்போஸிங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு வழங்கப்படவில்லை. படத்தின் இயக்குநராக நான் அழைக்கப்படவும் இல்லை. இதற்குக் காரணம் என்னவென்று எனக்கு இன்றுவரை தெரியாமல் தவிக்கின்றேன்.
இப்படத்தின் ஒப்பந்தத்தின் போதே அவர்களுக்குப் பிடித்த கவிஞர்களுடன்தான் அவர்கள் வேலை செய்வார்கள் என்று என்னிடம் சொல்லியிருந்தார்கள். ஆனால், என்னை ஏன் அழைக்கவில்லை என்று பிறகுதான் தெரிந்தது. என் படத்தில் தொடர்ந்து வைரமுத்துதான் பாடல்கள் எழுதியுள்ளார்.
யுவன்சங்கர் ராஜாவும் வைரமுத்துவும் சேர்ந்துகூடத்தான் பாடல் எழுதியுள்ளார்கள். ஆனால் நான் மட்டும் ஏன் நிராகரிக்கப்பட வேண்டும். இது என்ன நியாயம். படத்தின் புரொமோஷனுக்குக் கூட இளையராஜாவும் யுவனும் வரவில்லை. யுவன் மீது எந்தத் தப்பும் இல்லை, அவர் அப்போது எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தார்” என்று கூறினார்.
**-இராமானுஜம்**