இரண்டாவது நாளின் முடிவில் இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸை முடித்து, இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளதால் இரண்டாவது டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதுகுவலி காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் கே.எல்.ராகுல் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். ரவிச்சந்திரன் அஷ்வின் 46 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்க அணியில் மேர்கோ ஜேன்சண் நான்கு விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் டுவானே ஒலிவியர் தலா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (ஜனவரி 4) நடைபெற்றது. 202 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. அதில் தென்னாப்பிரிக்க அணியில் தனது அறிமுகப் போட்டியில் களமிறங்கிய கீகன் பீட்டர்சன் அரை சதம் அடித்து 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில், டெம்பா பவுமா அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பின்வரிசை ஆட்டக்காரர்களான ஜேண்சண் மற்றும் கேஷவ் மகராஜ் தலா 21 ரன்கள் எடுத்ததால் இறுதியில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணியை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக ஒரே இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது ஷமி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
தென்னாப்பிரிக்காவை விட 27 ரன்கள் பின் தங்கிய இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கியது. கேப்டன் கேப்டன் ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மயங்க் அகர்வால் 23 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார்.
ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 35 ரன்களுடனும், ரஹானா 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய அணி 58 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவிலேயே இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸை முடித்து, இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளதால் இரண்டாவது டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
**-ராஜ்**
.�,