நட்சத்திர ஜோடிகளான விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
நானும் ரௌடிதான் படப்பிடிப்பின்போது விக்னேஷ் சிவன் உடன் நயன்தாராவுக்குக் காதல் அரும்பியது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ தொடங்கினார்கள் .அதனை சட்டப்பூர்வமாக்கும் வகையில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரைச் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை நடைபெற்றது.
திருமணத்துக்காகப் பிரமாண்டமாக விசேஷ கண்ணாடி மாளிகை போன்று அரங்கு அமைத்திருந்தனர். இன்று காலை 10.20 மணிக்கு இந்து முறைப்படி நயன்தாராவிற்குத் தாலிகட்டினார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
நேற்று முன்தினம் மாலை மெஹந்தி விழாவுடன், கோலாகலமாகத் தொடங்கிய திருமண விழாவில், நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என சுமார் 100 பேர் மட்டுமே கலந்து கொண்டதாகத் தகவல் வெளியானது
இந்நிலையில், திருமண நிகழ்ச்சிக்கு 200 முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று நடந்த திருமணவிழாவில், ரஜினிகாந்த், ஷாருக்கான், இயக்குநர் மணிரத்னம், சரத்குமார், விஜய் சேதுபதி, கார்த்தி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், அட்லி, நெல்சன், பொன்வண்ணன், கேரள நடிகர் திலீப் முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா – விக்னேஷ் சிவனை வாழ்த்தினர்.
திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு சில கோடிகளுக்கு விற்பனை செய்துள்ளனர். இதனால் அந்த நிறுவனம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
குறிப்பாக திருமணத்திற்கு வருபவர்கள் புகைப்படம் எடுக்கக்கூடாது, தொலைபேசிகளை அரங்கத்திற்குள் எடுத்து வரக்கூடாது என கூறியுள்ளனர். திருமண விழா உரிமையைப் பெற்றிருப்பதால் எந்த ஒரு புகைப்படமோ அல்லது திருமண காட்சிகளோ செய்தி ஊடகங்களில் வெளியாகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.
“ஆகமவிதிமுறைப்படி , இந்துமுறைப்படி 20 சிவாச்சாரியார்கள் திருமணம் செய்து வைத்தனர். திருத்தணி, மயிலாப்பூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளிலிருந்து சிவாச்சாரியார்கள் வந்திருந்தனர். 8 மணி தொடங்கி 10.30 மணிக்குள் அற்புதமாகத் திருமணம் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் மொத்த பேரும் வந்திருக்கின்றனர்” என்று திருமணத்தை நடத்திவைத்துவிட்டு வெளியே வந்த திருத்தணியைச் சேர்ந்த புரோகிதர் செய்தியாளர்களிடம் கூறினார்.
**-இராமானுஜம்**