பிரான்ஸ் நாட்டில் சர்வதேச 75ஆவது கான் திரைப்பட விழா கடந்த மே மாதம் 17ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடக்கிறது.
இந்தியா சார்பாக நடிகைகள் தீபிகா படுகோனே, ஐஷ்வர்யா ராய், பூஜா ஹெக்டே, தமன்னா, நடிகர்கள் கமல்ஹாசன், மாதவன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
கான் விழாவில் பெவிலியன் குழு சார்பான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தீபிகா படுகோனே பேசினார். அவர் கூறுகையில், “இந்த வருடம் தங்க பனை நடுவர்கள் குழுவில் இந்தியா சார்பாக தான் பங்கேற்று இருக்கிறேன். அந்த விழாவில் 75 வருடங்களாக இந்தியர்களின் பங்களிப்பும் திறமையும் இருக்கிறது.
சினிமாவுக்குள் நான் நுழைந்த காலத்தில், என் திறமையை யாரும் பெரிதாக மதிப்பிட்டார்களா என தெரியவில்லை. ஆனால், அங்கிருந்து இன்று கான் விழாவின் நடுவராக இருப்பது பெருமிதமான ஒன்று. இதற்கு காரணம் இந்தியர்களின் திறமை தான்.
இந்தியர்கள் கான் விழாவில் பங்கேற்பது என்ற நிலை மாறி, இந்தியாவில் கான் விழா விரைவில் நடைபெறும்” என்று கூறினார்.
இதே போல, இந்த வருடமும் நடிகை ஐஷ்வர்யா ராயின் ரெட் கார்ப்பெட் உடையும் அவரது பேச்சும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வருடமும் அவர் தன் கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டுள்ளார்.
திரைப்பட விழாவில் அவர் கொடுத்துள்ள பேட்டியில், “பெண்கள் இல்லாமல் திரைப்படம் செய்ய முடியாது என்ற ஊக்கத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அவர்கள் இன்னும் வெளிச்சம் போட்டு காண்பிக்க பட வேண்டும். ஒரு திரைப்படம் உருவாவதற்கு பெண்களின் பங்கு திரைக்கு முன்னும் பின்னும் எங்கயுமே தவிர்க்க முடியாதது. எனவே ஆண், பெண் என வேறுபாடின்றி திறமைக்கும் ஆதரவும் வாய்ப்பும் தேவை” என கூறியுள்ளார்.
இவர்கள் மட்டுமல்லாமல், நடிகை பூஜா ஹெக்டே, தமன்னா மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இந்திய கலைகள், படங்கள் குறித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா**