இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் ‘மன்மதலீலை’ படத்தில் வேலை பார்த்தது குறித்து அசோக்செல்வன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
‘மாநாடு’ பட வெற்றிக்கு பிறகு வெங்கட்பிரபு ‘மன்மதலீலை’ படத்தை வெளியிட்டுள்ளார். ஓடிடிக்காக எடுக்கப்பட்ட திரைப்படம் நேற்று திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. அசோக்செல்வன், சம்யுக்தா, ஸ்மிருதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்த அசோக்செல்வன் இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்து பணிபுரிந்ததை குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
“2010-ல் நான் உதவி புகைப்படக் கலைஞனாக வேலை பார்த்தேன். அப்போது என்னுடைய பாஸ் என்னை அழைத்து வெங்கட்பிரபு உடன் வேலை பார்க்க இருக்கிறோம் என்று சொன்னார். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால் அவருடைய சென்னை 28 படத்தை நான் மிகவும் விரும்பிப் பார்த்தேன். புகைப்படக் கலைஞனாக நான் வெங்கட்பிரபு உடன் வேலை பார்த்த அன்று எனக்கு மிகவும் பிடித்த வெள்ளை சட்டையை அணிந்துகொண்டு எப்போதும் இல்லாமல் அன்று மட்டும் நேரமாக ஸ்பாட்டிற்கு சென்று விட்டேன்.
இந்த புகைப்படத்தில் என்னுடைய சிரித்த முகத்தை நீங்கள் பார்க்கலாம். அந்த ஷூட் முழுவதும் நான் அங்கேதான் இருந்தேன் அந்த நாள், நான் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் எதிர்காலத்தில் நிச்சயம் அவருடன் வேலை பார்ப்பேன் என்று!
இப்பொழுது 12 வருடங்கள் கழித்து வெங்கட் பிரபு சாருடன் மன்மத லீலை படத்தில் வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது என் கனவு நனவாகியுள்ளது என்று அந்த பதிவில் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.
**ஆதிரா**